சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜுகள், வீடுகளில் விபசார தொழிலில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் உத்தரவிட்டனர்.
இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் டெல்லி அழகியை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட நம்பரில் போன் செய்து வாடிக்கையாளர் போல பேசினர்.
அப்போது போனில் பேசியவர் ரூ. 20 ஆயிரம் பணத்துடன் ஓட்டலுக்கு வந்தால் டெல்லி அழகியுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றார். போலீசார் பணத்துடன் வாடிக்கையாளர் போல ஓட்டல் அறைக்கு சென்றனர். அப்போது விபசார புரோக்கர் பாஸ்கர் (27). அழகியை காட்டி ரூ. 20 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார். இதையடுத்து போலீசார் பாஸ்கரை கைது செய்து டெல்லி இளம்பெண்ணை மீட்டனர்.
ராமாபுரம் கோத்தரி நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது விபசார புரோக்கர்கள் செல்வி, குட்டி என்ற சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 இளம் பெண்களை மீட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆயுர்வேத கிளீனிக் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் சாதாரண உடையில் வாடிக்கையாளர் போல சென்றனர். அப்போது விபசார பெண் புரோக்கர் குமாரி போலீசாரிடம் பணம் வாங்கிய போது அவரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த இளம்பெண்ணை மீட்டனர்.
பெரம்பூரில் விபசாரத்தில் அழகிகளை ஈடுபடுத்திய லோகநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். லோகநாதன் பலமுறை விபசார வழக்கு களில் கைதாகியும் தொடர்ந்து விபசாரம் நடத்தி வந்தார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட இளம்பெண்கள் 6 பேரும் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.











Leave a comment